திரித்துவம் (Trinity)

ஒருசிலரிடம் கடவுள் எத்தனைப் பேர்? என்று கேட்டால், அவர், 'ஒருவர்'தான்  என்று உடனே பதில் கூறுவார்கள். அவர் எப்படி செயற்படுகிறார் என்று கேட்டால் முழிப்பார்கள்.
உண்மையில் வேதாகமத்தைத் தெளிவாகக் கற்ற கிறிஸ்தவர்களிடம் கேட்டால், 'கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவராக இருந்து செயல்படுகிறார்” (திரித்துவ கோட்பாடு) என்ற சத்தியத்தை தெளிவாக எடுத்துக் கூறுவார்கள்.

இந்தக் கொள்கை பரம இரகசியம். எமது பொதுவான விசுவாசமானது, ஏக தேவனைத் திரித்துவமாகவும், திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்கவேண்டும் என்பதே ஆகும்.

வேதாகமம் போதிக்கின்ற 'திரித்துவம்” என்ற சொல்லானது மூன்று கடவுள் கொள்கை அல்ல. அது ஒரே கடவுள் கொள்கையாகும்.

ஒரே ஒரு கடவுள். அவர் வித்தியாசமான மூன்று விதங்களில் செயற்படுகின்றார் எனவும் திரித்துவம் என்பது உண்மையான ஒன்று என்பதையும் எனது மனித அறிவுக்கெட்டியவாறு இறைவனின் திரித்துவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

முதலில் திரித்துவம் என்ற சொற்பதம் வேதாகமத்தில் எங்கும் கிடையாது. ஆயினும் வேதாகமத்தில் மூவராக தம்மை வெளிப்படுத்தியுள்ள தேவனை குறிப்பதற்காக திரித்துவம் என்ற சொற்பதம் வேத அறிஞர்களால் பாவிக்கப்படுகின்றது.

இதை விளக்கமாக கூறுவதானால் திரித்துவம்என்றால் மூவரான ஒரே தேவனை குறிக்கும். உதாரணத்திற்கு அணுவுக்குள் இலத்திரன், புரோட்டோன், நியுட்ரோன் என மூன்று பகுதிகள் உள்ளன. ஆயினும் நாம் அவை மூன்றையும் அணு என்றே அழைக்கின்றோம்.

அவ்வாறே, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராக தேவன் தம்மை மனிதர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். இதனை மனிதர்களால் அல்லது மனித மூளையினால் கிரகித்துக்கொள்வது கடினமாயினும் மூவராக செயல்படுகின்ற தேவன் ஒருவரே என்பதை புரிந்துகொள்வது அவசியமாகும். அதாவது மூன்று மனித தன்மைகளைப்போல ஒருவராகிய தேவன் செயல்படுகிறார். உதாரணமாக ஒரு மனிதனுக்குள்ளேயே ஆவி, ஆத்துமா, சரீரம் இருப்பதுபோலவும் ஒரே சூரியனுக்குள் ஒளி, உஷ்ணம், உருவம்இருப்பதுபோலவும் தேவனாகிய கர்த்தர் பிதாவாகவும் குமாரனாகவும் ஆவியானவராகவும், ஒருவரே மூவராகவும், மூவரும் ஒருவராகவும் இருக்கின்றார். இதில் சந்தேகப்பட எதுவுமில்லை.

அதேவேளை ஒரே நேரத்தில் பிதாவானவர் தனியாகவும் குமாரனானவர் தனியாகவும் ஆவியானவர் தனியாகவும் இருந்தபோதிலும் மூவரும் ஒன்றாகவே உள்ளனர். அதாவது மூன்றுவிதமாக வெளிப்பட்டாலும் அவர் ஒரே தேவனானவர். மெய்யாகவே ஒரே கர்த்தரான அவர் மூன்றுவிதமாக செயல்படுகின்றார். குமாரனானவர் தம்மை மனிதனாக வெளிப்படுத்தினார். இயேசு கிறிஸ்து நம்மைப் போல மனிதனானார். குமாரன் தேவனாக இருந்த போதும் மனிதனானதை போல பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்று வெவ்வேறு ஆள்தத்துவங்களைக் கொண்டிருந்தபோதும் அவர் தேவாதி தேவனாகவே இருக்கிறார். 

மேலும் திரித்துவத்தை மனிதர்களால் அவர்களுடைய சொந்த அறிவைக்கொண்டு தேவனை புரிந்துகொள்வது கடினமல்ல. ஆயினும் தாங்கள் இதனை புரிந்து கொள்ள தேவன் உங்களுக்கு உதவிசெய்யும்படி தொடர்ந்து வேதாகமத்தை வாசியுங்கள். முட்டைக்குள் இருந்து குஞ்சு வெளிவரும்போதே தனது தாயையும் வெளி உலகத்தையும் பார்க்கின்றது. அதுபோல நாமும் ஒருநாள் தேவனை தரிசிக்கும் வரை பொறுமையோடே ஓடவும், பரிசுத்தமாக வாழவும் தீர்மானிப்பதே மிகவும் சிறந்த காரியமாகும். பரிசுத்தவான்கள் தேவனை தரிசிப்பார்கள் அல்லவா?

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் இன்னும் தேவனுடைய வார்த்தைகளை தியானித்து அதிலே வளரவும் அதை அறிவிக்கவும் வேண்டியது அவசியமாகும். தேவ வசனத்தின் மூலம் மக்கள் மெய்யான சந்தோஷத்தையும் ஆத்துமாவிலே சமாதானத்தையும் கண்டடைய வேண்டுமென்பதே எமது வாஞ்சையும் ஜெபமுமாகும்.

கடைசியாக, கடவுள் என்பவர் யார் என்பதை சுருக்கமாக நான் கூறுவதானால்,கடவுள் ஆவியாயிருக்கிறார்.கடவுள் நீதியுள்ளவராக இருக்கிறார்.கடவுள் பரிசுத்தமுள்ளவராக இருக்கிறார்.கடவுள் அன்புள்ளவராக இருக்கிறார்.கடவுள் திரியேகராக இருக்கிறார்.கடவுளின் இத்தகைய குணாதிசயங்களை மனதில் இருத்திக் கொண்டு நாமும் அவருடையவர்களாக மாற கடவுளின் பிள்ளைகளாக மாற விரும்பினால் நாமும் இத்தகைய கடவுளின் குணாதிசயங்களை நாமும் பிரதிபலிக்கின்றவர்களாக மாறவேண்டியது அவசியமாகும். 

No comments: