ஜெபத்தில் மனச்சிதறலை தவிர்ப்பது எப்படி?

ப: தேவனது அனைத்து போராயுதங்களையும் பயன் படுத்துவதற்கான அடிப்படை வல்லமை, ஜெபத்திலேயே உள்ளது (எபே.6:13-18). எனவே நமது முழங்கால்களை முடமாக்கவும், சிந்தையைச் சிதறடிக்கவும் சத்துரு தன்னாலான அத்தனையையும் செய்வான்.
அவனது மனத்தாக்குதல்களை எப்படி மேற்கொள்ளலாம் எனில் நமது மனம், ஆவி, ஆத்துமா அத்தனையும் ஜெபத்தில் ஈடுபடுகின்றன.

~எப்போதும் ~இடைவிடாமல் ஜெப ஆவியைக் காத்துக்கொள்வதோடு மிகுந்த புத்துணர்வோடிருக்கும் வேளையை ஜெபத்திற்காகத் தெரிந்துகொள்ளுங்கள். பிதாவோடு தனித்திருக்க இயேசு அடிக்கடி அதிகாலை வேளையைத் தெரிந்து கொண்டார். சூரியன் உதிக்கு முன் பல மணிநேரங்களை ஹட்சன் டெய்லர் தனித் தியானத்தில் செலவிடுவாராம். நமது மனம், ஆவி, ஆத்துமா அத்தனையும் ஜெபத்தில் ஈடுபடுகின்றன. ஆகவே உடலும் மனதும் களைத்திருக்கையில் ஜெபம் செய்வது அவ்வளவு சுலபமல்ல.

ஜெபமென்றால் கிருபாசனத்திற்கு செல்வதாம். கிறிஸ்துவின் இரத்தத்தினாலேயே அங்கு சேரும் சிலாக்கியம் நமக்கு கிடைத்தது. அந்த இரத்தத்தின் அதிகாரத்தையும் வல்லமையையும் குறித்த தெளிவான நினைவு சத்துருவின் சதிகளைச் சங்கரிக்கும். இரத்தத்தின் ஆசீர்வாதங்களை வாயினால் அறிக்கை யிடுகையில் அவன் நடுங்குவான் (எபி.4:14-16@ வெளி.12:11).

நமது ஜெபங்கள் துதியினால் பொதிந்திருக்க வேண்டும். தேவன் துதிகளின் நடுவில் வாசம் பண்ணுகிறார் (சங்.22:3). இவ்விதம் தேவபிரசன்னத்தை அதிகமதிகமாய் உணரும்போது, ஜெப ஆவியில் திளைத்து விடுவதால், மனச்சிதறல் மேற்கொள்ளப்படும் (பிலி.4:6).
ஜெபத்தில் குறி இல்லாதிருக்கும்போது மனம் சிதறும். தெளிவான குறிப்புகள் வைத்து ஜெபியுங்கள். ஒரு பட்டியல் வைத்துக்கொண்டு ஒவ்வொரு குறிப்புக்காய் ஜெபிப்பது நல்ல முறை.

ஜெபத்தில் கண்களை மூட வேதத்தில் எங்கும் கட்டளையில்லை. மறைந்த பக்தன் 'ஆஸ்வால்ட் ஸ்மித்" தனது ஜெப அறையில் அங்குமிங்கும் நடந்துகொண்டு சத்தமாக ஜெபிப்பாராம். சத்தங்களும், சந்தடிகளும் இல்லாத ஓரிடத்தில் ஜெபத்திற்காய்த் தெரிந்துகொள்ள வேண்டும். கதவைப் ப+ட்டி ஜெபிக்க இயேசு கற்பித்தார். (மத் 6:6).

ஜெபம் ஓர் உரையாடல். திறந்த வேதத்தோடு ஜெபிப்பதை பயனுள்ளதாய்க் கண்டிருக்கிறேன். வாசித்து, ஜெபித்து, வாசித்து, ஜெபித்து... (தானி 9:1-3).

இத்தத்துவங்களையெல்லாம் பயிற்சித்தும் இன்னும் மனச் சிதறல் இருக்கலாம். ஆம், இது மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, சத்துருவின் ஆவிகளோடுள்ள போராட்டமல்லவா? சிந்தையை சிதறடிக்க வரும் எண்ணத்தை உடனே சிறைப்பிடியுங் கள். அதைச் சிந்திக்க நேரம் தரவேண்டாம். சத்துருவுக்கு எதிர்த்து நில்லுங்கள், ஓடிப்போவான். ~கிறிஸ்துவின் நாமத்தில் என்பது ஜெபத்தின் துவக்கத்திற்கும் முடிவுக்குமான வெறும் சொற்றொடர் அல்ல. அதுதான் ஜெபத்திற்கு அடித்தளமும் அதிகாரமுமாகும். இதை ஜெப நேர முழுவதிலும் மறக்க வேண்டாம்.

பிதாவின் வலது பக்கத்தில் நமக்காய் ஜெபிக்க இயேசுவும், நமக்காய் மன்றாட நமக்குள்ளேயே ஆவியானவரும் இருக்கையில் வெற்றி நமக்குத்தான் (ரோ.8:26). நாம் விடாது உறுதியாயிருக்க வேண்டும். மீதியை தேவன் பார்த்துக்கொள்வார்.

No comments: