திரித்துவத்தை விளக்க முடியுமா?

ஆம். நமக்கு ஒரே தேவன் உண்டு. அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று மூன்று நபர்களாகத் தம்மை வெளிப்படுத்தியுள்ளார்.
இம்மூன்று தெய்வீக நபர்கள் ஒரே தேவனாக மகிமையானதோர் அன்பின் ஐசுவரிய த்தினால் ஐக்கியப்பட்டுள்ளனர். தெய்வத்துவத்தில்; இவர்கள் இவ்விதம் இணைக்கப்பட்டிருந்தாலும் ஆள் தத்துவத்திலும் செயலிலும் தனித்திருக்கிறார்கள். தேவனின் திரியேகத்துவத்தை விளக்க கிறிஸ்துவின் வாழ்க்கையை நோக்குவோம். 

மரியாள் மீது ஆவியானவர் வந்து, உன்னத தேவனுடைய பலம் நிழலிட்டதால் இயேசு பிறந்தார். (லூக்.1:35) திருமுழுக்கு பெற்று இயேசு வெளிவந்த போது, பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் அவர் மீது வந்திறங்கினார். இவர் என் நேசகுமாரன் என்று பிதாவானவர் சாட்சியிட்டார்(மத்.3:16,17). பிதாவானவர் தமது குமாரனுக்கு ஆவியை அளவில்லாமல் கொடுத்தார்(யோ.3:34-36). எழுபதுபேர் உற்சாகமாய்த் திரும்பிவந்தபோது இயேசு பரிசுத்த ஆவியில் களி கூர்ந்து பிதாவை ஸ்தோத்தரித்தார்(லூக்.10:21).

நித்திய ஆவியினாலே இயேசு தம்மைப் பிதாவாகிய தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்(எபி.9:14). தேவனுடைய வலது பாரிசத்திற்கு இயேசு உயர்த்தப் பட்டபோது, வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பிதாவிடமிருந்து பெற்று தமது சீடர் மீது பொழிந்தருளினார் (அப்.2:33. 1:4,5. யோ.15:26).

அப்படியே, திரித்துவத்தின் மூன்று நபர்களும் ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்க்கையிலும் பிதாவாகிய தேவன் மறுஜென்ம முழுக்கினாலும், இயேசு கிறிஸ்து மூலமாய்ச் சம்பூரணமாய்ப் பொழிந்தருளிய பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும், நம்மை இரட்சித்திருக்கின்றார்(தீத்து. 3:5-7). நாம் 'பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே கீழ்ப்படிதலுக்கும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படுதலுக்கும்" தெரிந்து கொள்ளப்பட்டோம்(1பேதுரு.1:2). நாம் 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே" ஞானஸ்நானம் பெற்றும் இருக்கிறோம் (மத்.28:19).

ஒரே 'பிதா" ஒரே 'கர்த்தர்" மற்றும் 'ஒரே ஆவி" என்று வெளிப்படுத்தப்பட்டுள்ள 'ஒரே தேவன்" மீது தான் நமது 'ஒரே விசுவாசம்" இருக்கிறது (எபே 4:4-6). 'ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தைக் கிறிஸ்து மூலமாய்ப் பெற்றிருக்கி றோம்(எபே.2:18). 

பிதாவை நோக்கி, கிறிஸ்துவின் நாமத்தில், ஆவியானவரின் வல்லமையோடு நாம் ஜெபிக்கிறோம். 'ஆவியானவராகிய தேவன் நமது ஜெபங்களை எழுதுகிறார். குமாரனாகிய தேவன் நமது ஜெபங்களைச் சமர்ப்பிக்கிறார். பிதாவாகிய தேவன் நமது ஜெபங்களை ஏற்றுக்கொள்ளுகிறார்" என்கிறார் ஸ்பர்ஜன். நமக்கு கிறிஸ்துவின் சிந்தை உண்டா யிருக்கும்போது தேவன் தமது ஆவியின் மூலமாக தமது ஆழங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார். (1கொரி.2:10,16).

நன்றி : சத்தியவசனம் சஞ்சிகை.

No comments: